உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்த வடிகால்வாய் வல்லத்தில் கழிவுநீர் செல்வதில் சிக்கல்

 பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்த வடிகால்வாய் வல்லத்தில் கழிவுநீர் செல்வதில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் ஊராட்சியில் வடிகால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, வல்லம் வடகால் சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரியம் 1,500க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள், இங்கு வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள வாடகை குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பைகளை, ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவது இல்லை. இதனால், இப்பகுதி குடியிருப்பு மக்கள், அருகே உள்ள காலி இடங்கள் மற்றும் வடிகால்வாய் ஓரங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். அவை, வடிகால்வாய் முழுதும் துார்ந்து போகும் அளவிற்கு நிறைந்துள்ளன. இதனால், வடிகால்வாயில் விடப்படும் வீட்டு உபயோக கழிவுநீர், செல்லாமல் தேங்கி நிற்கிறது. அவ்வப்போது, வடிகால்வாய் முழுதும் கழிவு நீர் நிரம்பி, சாலையில் வழிகிறது. இதனால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, ஊராட்சி துாய்மை பணியாளர்கள், தினசரி குப்பைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி