பயன்பாடற்ற பள்ளி கட்டடத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது நத்தாநல்லுார் கிராமம். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்து, வகுப்பறையில் மழைநீர் சொட்டும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பள்ளி கட்டடம் கைவிடப்பட்டு, அருகே புதிய கட்டடம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. தற்போது, பயன்பாடின்றி கைவிடப்பட்ட பழைய பள்ளி கட்டடம் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும், பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கட்டடத்தை சுற்றி பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர். இதனால், இரவு நேரங்களில், பள்ளி கட்டடத்தின் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சப்படுகின்றனர். எனவே, நத்தாநல்லுார் கிராமத்தில் கைவிடப்பட்ட பழைய பள்ளி கட்டடத்தை சுகாதாரமாக வைத்திருப்பதோடு, அக்கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.