வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலில் சிவராத்திரி, மாசிமகம், பிரதோஷம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்க, வளாகத்தில் குடிநீர் வசதி ஏதும் இல்லாமல் உள்ளது.தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிக்க தண்ணீர் இல்லாததால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதை தவிர்க்க, கோவில் வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.