| ADDED : டிச 04, 2025 04:29 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், விஷ்ணு தீபத்தையொட்டி நாளை மாலை 6:00 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பரணி தீபத்தையொட்டி, ஸ்ரீகலியன்சாற்றுமறை உத்சவத்தை தொடர்ந்து, இன்று இரவு 8:30 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு கச்சிவாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனமும், இரவு 9:30 மணிக்கு மூலவருக்கு தைலகாப்பு சமர்பித்தலும், இரவு 10:00 மணிக்கு பெருமாளுக்கு திருவாராதனமும், நிவேதனமும் நடக்கிறது. விஷ்ணு கார்த்திகையான நாளை, மாலை 6:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து, பெருமாள் உபயநாச்சியாருடன், கோவில் கொடி மரம் முன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்குப்பின், சுவாமி முன், 20 அடி உயரத்திற்கு பனை மரத்தில் ஓலைகள் சுற்றி கட்டப்பட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதை தொடர்ந்து, பெருமாள் மாட வீதி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.