அங்கன்வாடி செல்லும் வழியில் தேங்கும் தண்ணீரால் மிளகர்மேனியில் சுகாதார சீர்கேடு
உத்திரமேரூர்: மிளகர்மேனி கிராமத்தில், அங்கன்வாடி மையம் செல்லும் வழியில் தேங்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், திருவாணைக்கோவில் ஊராட்சியில் மிளகர்மேனி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு அருகே உள்ள, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பிரதான குழாயின் மூலமாக உபரிநீர் வெளியேறுகிறது. அவ்வாறு, வெளியேறும் உபரிநீரை முறையாக வடிகால்வாய் அமைத்து வெளியேற்றாமல், ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கன்வாடி மையம் செல்லும் வழியில் விடுகின்றனர். இதனால், அங்கன்வாடி மையம் செல்லும் வழியில், தண்ணீர் குளம்போல் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பெற்றோர் கூறியதாவது: மிளகர்மேனி கிராமத்தில், அங்கன்வாடி மையம் செல்லும் வழியில், மேல்நிலை நீர்த்தொட்டியின் உபரிநீர் விடப்பட்டு வருகிறது. அவ்வாறு வெளியேறும் உபரிநீர், அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் வழியில் தேங்குகிறது. இதனால், குழந்தைகள் தினமும் அங்கன்வாடி மையத்திற்கு சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே, அங்கன்வாடி மையம் செல்லும் பாதையை, மண் கொட்டி சரி செய்ய, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.