உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்

பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்

வாலாஜாபாத்: திருமுக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படியில் தொங்கியபடி செல்வது அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக தடம் எண் டி36, டி81. டி55. ஆகிய அரசு பேருந்துகள் திருமுக்கூடல், நெய்யாடுவாக்கம், மதுார், அருங்குன்றம், ஆனம்பாக்கம், படூர், சிறுமயிலுார், அரும்புலியூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் பயணித்து காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி கூடங்களுக்கு செல்லும் மாணவர்கள் சிலர், வேண்டுமென்றே படியில் தொங்கி ஆபத்தான பயணம் செய்வது சக பயணியர் இடையே அச்சம் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, நேற்று மாலை டி55 அரசு பேருந்தில் பயணித்த சிலர் கூறியதாவது: பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிப்பதையே விரும்புகின்றனர். பேருந்து படியில் தொங்கியபடி, கால்களை தரையில் படும்படி சாகசம் செய்து மற்றவர்களை நடுங்க செய்கின்றனர். இதுகுறித்து கேட்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஒழுங்கினமான செயல் மாணவர்கள் மத்தியில் உள்ளது. எனவே, வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம், பழையசீவரம், திருமுக்கூடல் உள்ளிட்ட வழித் தடங்களில் போலீசார் கண்காணித்து, வேண்டுமென்றே பேருந்து படியில் தொங்கி சாகசம் செய்யும் மாணவர்களை எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி