பள்ளி விடும் நேரத்தில் சாலையை கடக்க மாணவியர் அவதி
உத்திரமேரூர், -உத்திரமேரூரில் பள்ளி விடும் நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் மாணவியர் அவதிபடுகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1,200 மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு வரும் மாணவியர் தினமும் நடந்தும், சைக்கிளிலும் வந்து செல்கின்றனர். இதில், நடந்து வரும் மாணவியர், காஞ்சிபுரம் செல்லும் சாலையை கடந்து பள்ளிக்கு உள்ளே செல்ல வேண்டும். அதேபோல, பள்ளி முடிந்து வெளியே செல்லும்போதும் சாலையை கடக்கும் நிலை உள்ளது. அவ்வாறு சாலையை மாணவியர் கடக்கும்போது, வாகனங்கள் அதிகமாக செல்வதால் சிரமப்படுகின்றனர். மேலும், சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி மாணவியர் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி நேரத்தில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, மாணவியர் தடையின்றி செல்ல, உரிய நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.