காஞ்சியில் சமையல் காஸ் பெற 15 நாள் காத்திருக்கும் அவலம்
காஞ்சிபுரம்: சமையல் காஸ் வினியோகிக்க ஏஜன்சிகள் தாமதம் செய்வதால், 15 நாட்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளதாக , காஞ்சிபுரம் நகர மக்கள் வேதனை தெரிவித்தனர். காஞ்சிபுரம் நகரில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின்கீழ், எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜன்சிகள் செயல்பட்டு வருகின்றன. மொபைல் போனில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஒரு வாரத்திலேயே, எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தன. சமீப காலமாக, 15 நாட்களுக்கு மேலாகியும், எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யாமல், ஏஜென்சிகள் தாமதம் செய்கின்றன. ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே வைத்துள்ள குடும்பத்தினர், சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, சிலிண்டர்கள் வினியோகிக்க தாமதம் ஆவதாக, ஏஜன்சியினர் கூறுகின்றனர். தாமதமின்றி விரைவாக சிலிண்டர்களை வினியோகம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காஞ்சிபுரம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.