பினாயூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர்: சேதமடைந்துள்ள பினாயூர் சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகா, பினாயூரில் இருந்து, திருமுக்கூடல் வழியே, பழைய சீவரம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, பினாயூர் பகுதி மக்கள், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் கல் குவாரிகளின் லாரிகளும் இவ்வழியே செல்கின்றன. தொடர்ந்து, வாகன போக்குவரத்தால் சேதமடைந்த இச்சாலை, இரண்டு ஆண்டுக்கு முன், 1.57 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. தற்போது, கல்குவாரி லாரிகளால் சாலை மீண்டும் சேதமடைந்து, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர். மழை நேரங்களில் வாகன ஓட்டிகள், சாலையில் உள்ள பள்ளங்களால் நிலைத்தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள பினாயூர் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.