உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முருக்கேரியில் இடிக்கப்பட்ட இடத்திலேயே அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்தல்

முருக்கேரியில் இடிக்கப்பட்ட இடத்திலேயே அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்: முருக்கேரியில் இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அதே இடத்திலேயே மீண்டும் கட்ட, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், திணையாம்பூண்டி ஊராட்சியில், முருக்கேரி துணை கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளி அருகே, 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்ததால், அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதையடுத்து, நான்கு ஆண்டுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பழுதடைந்த அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, அங்கன்வாடி மையம் அங்குள்ள ஊராட்சி சேவை மையத்தில், தற்காலிகமாக இயங்கி வருகிறது. இங்கு, போதிய இடவசதி இல்லாததால், குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கு கட்டட வசதி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்தோர், குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க, தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, முருக்கேரியில் இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் அதே இடத்தில் கட்ட, ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ