உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாடகை கட்டடத்தில் இயங்கும் உத்திரமேரூர் காவல் நிலையம்

வாடகை கட்டடத்தில் இயங்கும் உத்திரமேரூர் காவல் நிலையம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், உத்திரமேரூர்- - மானாம்பதி சாலையில், திரவுபதியம்மன் கோவில் எதிரே காவல் நிலையம் இயங்கி வந்தது. இந்த காவல் நிலையம், கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்தது. காவல் நிலைய கட்டடத்தின் கூரை கட்டைகள் பழுதாகி, ஓடுகள் விழுந்து வந்தன. இதனால், மழைக்காலங்களில், கூரை வழியாக மழைநீர் சொட்டும் நிலை ஏற்பட்டது. அச்சமயங்களில், ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. மேலும், தொடர் மழையின் போது போலீசார் கடும் சிரமப்பட்டு வந்தனர். மழை மற்றும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள, காவல் நிலைய கூரை மீது தார்ப்பாய் போட்டு செயல்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்திரமேரூர், சின்னநாரசம்பேட்டை தெருவில், அய்யனார் குட்டை, அரசு முன்மாதிரி நடுநிலைப் பள்ளி அருகே தனியார் கட்டடம் ஒன்றில் செயல்பட துவங்கியது. இந்த வாடகை கட்டடமும் போதுமான இடவசதி இல்லாததால், இடநெருக்கடிக்கு மத்தியில் தற்போது இயங்கி வருகிறது. மேலும், விபத்து உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய வாகனங்களை, சின்னநாரசம்பேட்டை தெருவில் உள்ள காவல் நிலையம் எதிரே நிறுத்தப்படுகிறது.இதனால், அப்பகுதி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள அரசு முன்மாதிரி நடுநிலைப் பள்ளி அருகே உள்ள சாலை வரை இந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.அச்சமயங்களில், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உத்திரமேரூர்- - மானாம்பதி சாலையில், பழுதடைந்த பழைய காவல் நிலைய கட்டடமும், தற்போது மிகவும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, உத்திரமேரூரில் கைவிடப்பட்ட பழைய காவல் நிலையத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே பகுதியில் புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ