ஊத்துக்காடு அம்மன் கோவில் கும்பாபிஷேக பணி தீவிரம்
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - தாம்பரம் சாலையில், வாலாஜாபாத் அடுத்து ஊத்துக்காடு கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், தேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூஜை நடைபெறுகிறது. ஆடி மாத விழா முக்கிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்து செல்வது வழக்கத்தில் உள்ளது.ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில், 2012ம் ஆண்டு, கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.அதை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பின், வரும் 2025ம் ஆண்டு, பிப்., 2ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த வாரம் பாலாலயம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் புணரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.