வள்ளி, தெய்வானை முருகனுக்கு திருக்கல்யாண உத்சவம் விமரிசை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகன் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உத்சவமான நேற்று, காலை 8:30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், பாலதர்ம சாஸ்தா ஹோமம் என, பல்வேறு ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து புதிதாக செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முருகன் வீதியுலா வந்தார். இன்று, மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.