நோ என்ட்ரியில் செல்லும் வாகனங்கள் காந்தி சாலையில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலையில், 'நோ என்ட்ரி' பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படுவதால், தடையை மீறி செல்வோருக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சிபுரம் காந்தி சாலையில் பட்டு கூட்டுறவு சங்கம், தனியார் பட்டு மற்றும் ஜவுளி கடை, உணவகம், வங்கி, திருமண மண்டபம், தனியார் நிதி நிறுவனம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இதனால், வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த சாலையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், மூன்று வழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதில், காந்தி சாலையின் இருபுறமும் கடைகளுக்கு செல்லும் வகையில் தனியாக இருவழிப் பாதையும், சாலையின் நடுவே, மூங்கில் மண்டபத்தில் இருந்து தேரடி வழியாக, செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தனி வழியும் அமைக்கப்பட்டது. இதனால், தேரடியில் இருந்து மூங்கில் மண்டபத்திற்கு செல்ல, சாலை நடுவே உள்ள பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, 'நோ என்ட்ரி' என, போலீசார் சார்பில், எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசாரின் தடையை மீறி, 'நோ என்ட்ரி' பாதையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதால், இப்பாதையில், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, 'நோ என்ட்ரி' பாதையில் வாகன ஓட்டிகள் செல்வதை கண்காணிக்கவும், தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.