7,508 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு 7,508 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவங்கின. தமிழகம் முழுதும் சட்டசபை தேர்தல், அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, தீவிர திருத்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கான முக்கிய பணிகளில் ஒன்றான ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று துவங்கின. கலெக்டர் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில், சரிபார்ப்பு பணிகள், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் நேற்று நடந்தன. 2,675 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,541 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் பெல் நிறுவன பொறியாளர்களால் மட்டுமே சரி பார்க்கப்படுவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.