குமரியில் விபத்து பலி பாதியாக சரிவு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாரின் தீவிர நடவடிக்கையால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது விபத்து மரணம் பாதியாக குறைந்துள்ளது.2024 ஜன., முதல் மார்ச் வரை மூன்று மாதங்களில் விபத்துகள் மூலம் 106 பேர் இறந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதே கால அளவில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எஸ்.பி ஸ்டாலின் கூறியதாவது: விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி என்ற இலக்கை நோக்கி மாவட்ட போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து வருகின்றனர். அதிலும் சிறுவர்கள் ஓட்டும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ரூ. 600 ரூபாய் முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சிறுவர்கள் வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் பொருத்தி இருந்தால் அது உடனடியாக அகற்றப்படுகிறது.அரசு பஸ் உட்பட நான்கு சக்கர வாகன டிரைவர்கள் குடிபோதையில் உள்ளார்களா என்று பரிசோதிக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் குமரி மாவட்டத்தில் விபத்து மரணம் குறைந்து வருகிறது.