ரூ. 10 ஆயிரம் லஞ்சம் மருத்துவ ஆய்வாளர் கைது
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் புதிய மருந்து கடை தொடங்குவதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவ ஆய்வாளர் கைது செய்யப்பட்டார் கன்னியாகுமரிமாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் ஹரிசுதன். இவர் மருந்து கடை துவங்க நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள அரசு மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதற்கு அனுமதி வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என அலுவலகத்தில் பணிபுரியும் மருத்துவ ஆய்வாளர் கதிரவன் கேட்டுள்ளார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுறுத்தல்படி ஹரிசுதன் நாகர்கோவில் பகுதியில் வைத்து கதிரவனிடம் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஏ.டி.எஸ். பி., மெக்கிலர் எஸ்கால் தலைமையிலான போலீசார் கதிரவனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.