கரூர்: கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தேசமடைந்துள்ள நிழற்கூடங்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் ஜரூராக நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோ றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பல்வேறு வேலை நிமித்தமாக கரூர் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, திருச்சி செல்லும் சாலையில் உள்ள சுக்காலியூர், புலியூர், வீரராக்கியம், மணவாசி, மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை பகுதிகளில் இருந்து நிறைய தொழிலாளர்கள் பஸ் மூலம் கரூர் வந்து செல்கின்றனர். கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.ஆனால், பல இடங்களில் நிழற்கூடங்களின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. பயணிகள் உட்கார அமைக்கப்பட்ட சீட்கள் கழன்றும், காணாமல் போய் விட்டது. இதனால் பயணிகள் மழை, வெயிலுக்கு நிழற்கூடத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், நடப்பாண்டு கோடை காலத்தையொட்டி, கரூர் மாவட்டத்தில் வெயில், 105 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நிழற்கூடம் பழுதடைந்த இடங்களில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுவர்.எனவே, பொது மக்கள் நலன் கருதி கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட, கிராம பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.