டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு 26 சதவீதம் பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு26 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'கரூர், செப். 15- டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வில் மாவட்டத்தில், 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்- 2 பதவிகளில், 507 காலி பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு பணிகளுக்கு குரூப்- 2 ஏ பதவிகளில் 1,820 காலி பணியிடங்களும் என மொத்தம், 2,327 பணியிடங்கள் உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 முதல் நிலை எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.இதில் கரூர், குளித்தலை ஆகிய சுற்று பகுதிகளில் உள்ள, 39 மையங்களில் மொத்தம், 10,821 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில், 7,975 பேர் தேர்வு எழுதினர். 2,846 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது, 26 சதவீதம். காலை, 8:30 முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களிடம் தேர்வு கூட அனுமதி சீட்டு உள்பட பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். பென்சில், அழிப்பான்கள், மொபைல் போன், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.முன்னதாக, கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரி, ராயனுார் மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய தேர்வு மையங்களை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.