உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் துார் வாரப்படாத அமராவதி பாசன வாய்க்கால்

கரூரில் துார் வாரப்படாத அமராவதி பாசன வாய்க்கால்

கரூர்: கரூர் அமராவதி ஆற்றின் பாசன வாய்க்கால் துார்வாரப்படாததால், விளை நிலங்கள் தண்ணீர் கிடைக்காமல் வறண்ட பூமியாக மாறி வருகிறது.கரூர் மாவட்டம், செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இங்கிருந்து பாசன பகுதிகளில் பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன்மூலம், 4,500 ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது. பெரிய ஆண்டாங்கோவில், சின்ன ஆண்டாங்கோவில், குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம், பாலம்மாள்புரம், அரசுகாலனி ஆகிய பகுதிகள், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் ராஜ வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால், முற்றிலும் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக வாய்க்கால்கள் பாதையே தெரியாத நிலை உள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தகரிப்பு செய்யாமல், நேரடி யாக வாய்க்காலில் விடுகின்றனர். சாயப்பட்டறைகளில் இருந்து சாயக் கழிவுநீரும் வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருகிறது.இது குறித்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டாலும், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கிறோம் என, சொல்வதோடு முடித்து கொள்கின்றனர். ஆறு, வாய்க்கால் மாசுபடுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்