ரூ.14.09 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
கரூர்: சாலைபுதுார் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 14.09 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை வர்த்தகம் நடந்தது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடக்கிறது. கரூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை, விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் பங்கேற்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.நேற்று நடந்த ஏலத்தில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 588 மூட்டை நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 66.30 ரூபாய், அதிகபட்சமாக, 73.90 ரூபாய், சராசரியாக, 71.70 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 19,664 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 14 லட்சத்து, 9,271 ரூபாய்க்கு விற்பனையானது.