கரூர்: போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுக்க, கரூர் மனோகரா கார்னரில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூரில் நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.இதன் அருகே மனோகரா கார்னர் மற்றும் அதை சுற்றி தின்னப்பா கார்னர் சாலை, ஜவஹர் பஜார் சாலை, திருச்சி ரோடு மற்றும் கோவை சாலைகள் செல்கிறது. அந்த, பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, வெளியேறும் பஸ்கள் மனோகரா கார்னரை சுற்றி செல்கிறது. இதனால், இந்த வழியாக நடந்து சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே மனோகரா கார்னரை சுற்றி, நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். ஆனால், இந்த கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கரூரை விட பரப்பளவு குறைந்த, வருமானம் குறைந்த நாமக்கல், திருச்செங்கோடு நகராட்சியில், பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி, நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்கள், மனோகரா கார்னரை சுற்றி செல்கிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. குறுகிய சாலையில் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட, கனகர வாகனங்கள் செல்வதால் நடந்து செல்பவர்கள், விபத்துகளில் சிக்குகின்றனர்.தொழில் வளம் மிகுந்த, கரூர் நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றனர். இவர்கள் வசதிக்காகவும், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் ஏற்படும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும், நடைமேம்பாலம் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.