கரூர்: ''குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் 58 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரை பறிகொடுத்துள்ளனர். இதனால், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கரூர் மாவட்ட எஸ்.பி., நாகராஜன் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிர் பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விபத்துகளை தடுக்கவும். உயிர் பலிகளை கட்டுப்படுத்தவும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவது, மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் போன்ற விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டும், ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது கூறி வந்தாலும் விபத்தை தடுக்க முடிவதில்லை. கரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் விபத்தில் இறந்தவர்கள் 158 பேர், இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்கள் மட்டும் 68 பேர். குறிப்பாக, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் குடிபோதையில் விபத்து அதிகரித்து வருவதாக போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். ஆகவே, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை அடையாளம் காண, 'ப்ரீத் ஆல்கஹால் அனலைசர்' பயன்படுத்தி துள்ளியமாக குடிமகன்களை பிடித்து வழக்கு தொடரப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட எஸ்.பி., நாகராஜன் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் விபத்தில் உயிர் பலிகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் தான் அதிகளவு விபத்து நடக்கிறது. விபத்தில் அதிகம் உயிரிழந்தவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கடந்தாண்டில் ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 68 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணம், இந்த நாட்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்ளே உயிரை பறி கொடுத்துள்ளனர். உயிர்ப்பலியை தடுக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தவும் தீவிர வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.பி., கூறினார்.