கரூர் அருகே மணல் கடத்தி விற்பனை செய்த 5 பேர் கைது
கரூர், கரூர் அருகே, ஆற்று மணலை கடத்தி, பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் திருச்சி சாலை, காவிரியாற்று ஆற்றுப் பகுதிகளில் இருந்து, மணலை கடத்தி விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளியணை போலீசார் நேற்று, சம்பவ இடத்தில் உள்ள மணல் சலிப்பகத்தில் சோதனை செய்தனர்.அப்போது, அங்கிருந்த மணல் சலிப்பகம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த, ஆறு லாரிகளில், மூன்று லாரிகளில் ஒன்பது யூனிட், காவியாற்று ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மணல் சலிப்பகத்தில் இருந்த சதீஷ்குமார், 32; பிரகாஷ், 32; பாரதி, 30; சோடா சதீஷ் குமார், 33; மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி, 40; ஆகிய, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும், மணல் சலிப்பகத்தில் இருந்த மணல் மற்றும் ஆறு லாரிகளையும், போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் தொடர்பாக தப்பியோடி லாரி உரிமையாளர் பிரசன்னா, தினேஷ், மற்றொரு தினேஷ் ஆகிய, மூன்று பேரை வெள்ளியணை போலீசார் தேடி வருகின்றனர்.