உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செம்மறி ஆடு பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

செம்மறி ஆடு பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

அரவக்குறிச்சி, பொருளாதார நஷ்டத்திலிருந்து பாதுகாக்க, செம்மறி ஆடு பட்டி பராமரிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்து களை, ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு, கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.அரவக்குறிச்சி பகுதியில் விவசாயம் மட்டுமின்றி, ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்த்து வருகின்றனர். செம்மறி ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, உயிரிழப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. செம்மறி ஆடு பட்டி சரியாக அமைக்காவிட்டால் சளி, இருமல், வாய் புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது.இவற்றை தடுக்க ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பட்டி தரம்புகள் விசாலமாக அமைக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஆட்டுக்கு, 4 சதுர அடி இடைவெளி விட வேண்டும். பட்டிக்கு மூன்றில் ஒரு பங்கு அளவு மட்டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது. காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கிழக்கு பகுதியில் வெற்றிடம் விட வேண்டும். தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக் கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும்.தினமும் பட்டியை சுத்தப்படுத்த வேண்டும். பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, பெரிய ஆடுகளின் மீது கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிப்பது நல்லது. இதனால் வாய் புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம். மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை பனிக்கால நோய்களில் இருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்து கொள்ளலாம்.இத்தகவலை, கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி