வட்டார அளவில் கலைத்திருவிழா தரகம்பட்டி அரசு மாதிரி பள்ளி முதலிடம்
குளித்தலை, நவ. 15-தரகம்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான கலைத்திருவிழா மற்றும் வானவில் மன்ற போட்டிகளில், முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக, 2024-25ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான கடவூர் யூனியனுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா போட்டி தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாகவும். 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் நடந்தது.கலைத்திருவிழா போட்டிகளில் தெருக்கூத்து, வீதி நாடகம், பிறவகை நடனம், செவ்வியல் பாடல், நாட்டுப்புறப் பாடல், பானை ஓவியம், நாட்டுப்புற நடனம், பல குரல் பேச்சு, தனி நபர் நடிப்பு, செதுக்கும் சிற்பம் ஆகிய போட்டிகளில், 27 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வட்டார அளவில் முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதேபோல் வானவில் மன்ற போட்டிகளிலும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவினர், வட்டார அளவில் முதலிடம் பெற்றனர்.மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீ, உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவி சரண்யா உள்பட அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.