மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
கரூர்: மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சி.ஐ.டி.யு., மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் இருந்து, உள்ளூர் பயன்பாட்டுக்கு மணல் அள்ள, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் மூடப்பட்டு விட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.வருமானம் இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மாடுகளின் பராமரிப்பு செலவும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் மணல் குவாரி திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே செயல்பட்டு வந்த நன்னியூர், மல்லம்பாளையம் ஆகிய இடங்களில் குவாரிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.