நிலத்தகராறில் தாக்குதல் 5 பேர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை: குளித்தலை அடுத்த கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்சங்கர், 34; கடந்த, 11ல், இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அதே ஊரை சேர்ந்த மலையாளி, மாரியாயி, குருநாதன், மல்லிகா ஆகிய, நான்கு பேர் சேர்ந்து, டிராக்டர் மூலம் உழவுப்பணி மேற்கொண்டனர். இதையறிந்த கார்த்திக்சங்கர் மற்றும் இவரது தந்தை பிச்சை ஆகிய இருவரும் உழவுப்பணியை தடுத்து கேட்டனர். அப்போது தகராறு முற்றி கைகலப்பானது. இதில், மலையாளி, 48, என்பவர், கடப்பாரையால் பிச்சையை தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அவரை மீட்ட கார்த்திக்சங்கர், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.இதுகுறித்து கார்த்திக்சங்கர் கொடுத்த புகார்படி, நான்கு பேர் மீதும்; மலையாளி கொடுத்த புகார்படி, கார்த்திக்சங்கர் மீதும் மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.