வாங்கப்பாளையம் பிரிவில் சேதமடைந்த சிக்னல்கள்
கரூர் :கரூர் அருகே, போக்குவரத்து சிக்னல் விளக்குகள் செயல்படாமல் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.கரூர் நகரில் ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கோவை சாலை, சுங்ககேட், திருமா நிலையூர், திருகாம்புலியூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கப்பாளையம் பிரிவு உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் சிக்னல் விளக்குகள், சேதமடைந்து எரியாத நிலையில் உள்ளது.குறிப்பாக, கரூர்-சேலம் பழைய சாலை வாங்கப்பாளையம் பிரிவு பகுதியில், பல மாதங்களாக சிக்னல் விளக்குகள் எரியாமல் சேதமடைந்துள்ளது. இதனால், கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெங்கமேடு பகுதிக்கு செல்லும் வாகனங்கள், நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதியில் இருந்து, மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கி கொள்கிறது.மேலும், கரூர் நகரில் இருந்து வெண்ணைமலை, செம்மடை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால், சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வாங்கப்பாளையம் பிரிவில், செயல்படாமல் சேதமடைந்துள்ள, சிக்னல் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.