மரவள்ளி விலை சரிவு விவசாயிகள் கவலை
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் வட்டார பகுதியான பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், திருமலைப்பட்டி, கண்ணுார்பட்டி, மின்னாம்பள்ளி மற்றும் கொல்லிமலை வட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் மரவள்ளி கிழங்கை வியாபாரிகள் வாங்கி, செல்லப்பம்பட்டி, ஆத்துார், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரி களுக்கு ஜவ்வரிசி தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர். சேகோ பேக்டரி உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.தற்போது, சேகோ பேக்டரியில் ஜவ்வரிசி உற்பத்தி அதிகமாக நடந்து வருகிறது. இதற்காக மரவள்ளி கிழங்குகளை, அதிகளவில் விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன், 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, 1,000 ரூபாய் குறைந்து, 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 'சிப்ஸ்' மரவள்ளி கிழங்கு, கடந்த வாரம், 9,500 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் குறைந்து, 8,500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.