உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி
கரூர்:கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சமூக மேம்பாட்டு திட்டத்தில், உள்கட்டமைப்பை மேம்படுத்திட நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிறுவனத்தின் பொது மேலாளர்(மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பினை மேம்படுத்திட பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏமூர், வளையாபாளையம், பொன்னியாக்கவுண்டன்புதுார், சொட்டையூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள கோவில்களுக்கு புனரமைப்பு மற்றும் மகா கும்பாபிஷேகத்திற்கு நன்கொடையாக, 1.75 லட்சம் ரூபாய்க்கான செக், அந்தந்த கோவில் திருப்பணிக்குழுவிடம் வழங்கப்பட்டது. மாவட்ட யோகா கூட்டமைப்பால் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான யோகா போட்டிக்கு நன்கொடையாக, 50 ஆயிரம் ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டது. துணை பொது மேலாளர் ஜெயக்குமார், முதன்மை மேலாளர் சிவக்குமார் உள்பட பலர் இருந்தனர்.