அரசு பள்ளி மாணவருக்கு வைப்பு பத்திரம் வழங்கல்
அரவக்குறிச்சி :விபத்தில் தந்தையை இழந்த, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவருக்கு, வைப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், உயர் கல்வியை தொடரும் வகையில், தமிழக அரசு அவர்களுக்கு, 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தற்போது எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ரித்திஷின் தந்தை, கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவருக்கு கல்வி தொடர்வதற்கான ஒப்பளிப்பு ஆணை, கடந்த பிப்., 20ம் தேதி வழங்கப்பட்டது.தற்போது மாணவருக்கான தொகை, பவர் கிரேட் கார்ப்பரேஷனில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதற்கான பத்திரத்தை மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) சண்முகவேல் மாணவனின் தாயாரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, தர்மராஜ், கண்காணிப்பாளர் ராமையா ஆகியோர் பங்கேற்றனர். வைப்பு தொகை பத்திரத்தை விரைந்து வழங்கிய தமிழக அரசு, மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்களுக்கு தலைமையாசிரியர் சாகுல் அமீது நன்றி கூறினார்.கல்வி உதவித்தொகை மூலம், மாணவருக்கு ஆண்டுதோறும் அவருடைய வங்கி கணக்கிற்கு வட்டி வழங்கப்படும். பின்பு, மூன்றாண்டு உயர்கல்வி படிப்புக்கு, அத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.