ஆனி மாதம் துவங்கியதால் வெல்லம் விலை அதிகரிப்பு
கரூர், ஆனி மாதம் தொடங்கியதால், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் விலை அதிகரித்துள்ளது.கரூர் மாவட்டத்தில், நொய்யல், சேமங்கி, குளத்துப்பாளையம், கோம்புபாளையம், திருகாடுதுறை, தவிட்டுபாளையம், தளவாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கடந்த வாரம், 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,250 முதல், 1,350 ரூபாய் வரையிலும், அச்சு வெல்லம், 1,300 முதல், 1,330 ரூபாய் வரையிலும் விலை போனது.நேற்று உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,450 ரூபாய், அச்சு வெல்லம் 1,400 ரூபாய்க்கு விற்றது. விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், உற்பத்தி செய்யப்படும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லத்தை கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வர். ஆனி மாதம் தொடங்கிய நிலையில், கிராமப்புறங்களில் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாக்கள் தொடங்கியுள்ளது. இதனால், வெல்லத்துக்கு தேவை ஏற்பட்டுள்ளதால், விலை சற்று அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.