வேளாண் தொழில் முனைவோருக்கு வட்டி மானியத்துடன் கடன் உதவி
வேளாண் தொழில் முனைவோருக்கு வட்டி மானியத்துடன் கடன் உதவிகரூர், அக். 11--வேளாண் தொழில் முனைவோருக்கு, வட்டி மானியத்துடன் கூடிய கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும், வங்கி கடனுடன் கூடிய மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக, 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக, 25 திட்டங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும்.விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவைகள், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்கு வரத்து வசதிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளலாம். மேலும், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் வங்கிகடன் பெற்று, 35 சதவீதம் வரை பின்னேற்பு மானியம் பெற்ற தகுதியான நபர்கள் வட்டிமானியம், 3 சதவீதம் வரை பெற தகுதியுடையவர்.இந்த திட்டம் குறித்து, https://agriinfra.dac.gov.inஎன்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ddab.gmail.comஎன்ற இ.மெயில் முகவரி, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), கரூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.