மணல் குவாரிகளை திறக்க கோரி லாரி உரிமையாளர் சங்கம் மனு
கரூர், டிச. 10-மணல் குவாரிகளை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் ஜெயசந்திரன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும், ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு மணல் குவாரிகள் இயங்கிய போது, 700க்கும் மேற்பட்ட லாரிகள் ஆன்லைனில் பதிவு செய்து இருந்தோம். அவர்களுக்கு மணல் வழங்கப்படவில்லை. எனவே, குவாரியை திறக்கும் போது ஆன்லைனில் முன்பதிவு போது பணம் செலுத்திய லாரிகளுக்கு, முதலில் மணல் வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, அமலாக்கத்துறை ரெய்டு நடந்த எந்த குவாரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில், 50 ஆயிரம் லாரிகள் ஓடாமல் பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்களுக்கு வரி கூட செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இனியாவது மணல் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.