வேட்டமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு
கரூர்:வேட்டமங்கலத்தில், ஒரு வாரமாக நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர்.கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் பஞ்.,க்குட்பட்ட நொய்யல், குறுக்குசாலை, வெள்ளியம் பாளையம், கணபதிபாளையம், அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மரவாபாளையம் காவிரி ஆற்று நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள, கீழ்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கு, வீடுகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். காவிரி ஆறு வறண்டு கிடப்பதால், நீரேற்று நிலையத்தில் உள்ள கிணற்றுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதுபோன்ற நிலை ஏற்படும் போது, ஆற்றின் குறுக்கே சிறிய அளவில் கரை அமைத்து, வடகரையில் ஓடும் தண்ணீரை தென்கரையில் கிணறு உள்ள பகுதிக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.எனவே, ஆற்றின் குறுக்கே கரை அமைத்து, கிணறு பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து குறுக்குசாலை பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.