கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை குளிர்ந்த காற்றால் பொதுமக்கள் நிம்மதி
கரூர், புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் வறண்ட வானிலை மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, பல இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால், மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணி முதல், 5:15 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெங்க மேடு, திருமாநிலையூர், திருகாம்புலியூர், தான்தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது.கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.