உடல் பரிசோதனை செய்யும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கம்
கரூர், ''உடல் பரிசோதனை செய்யும் வகையில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படுகிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் மருத்துவ பணிகளுக்கு, 1,600க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், 3,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் வாடகை, பழமையான கட்டடங்களில் இயங்கி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்ய, 4,000 ரூபாய், தனியார் மருத்துவமனைகளில், 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. மக்களுக்கு அனைத்து வகையான உடல் பரிசோதனையும், இலவசமாக செய்யும் வகையில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டதை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கவுள்ளார். இவ்வாறு கூறினார்.