சாக்கடையில் விழுந்த மாணவன் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு சாவு
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில் பெய்த கன மழையால், கழிவுநீர் சாக்கடையில், பள்ளி சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஹபீப் நகரை சேர்ந்தவர் முகமது உஸ்மான், 12. இவர், பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து, வீட்டுக்கு வரும் வழியில் திண்டுக்கல் சாலை, தனியார் வங்கி எதிரில் உள்ள கழிவுநீர் சாக்கடையில், தனது சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து, ஓடி வந்து உதவி செய்வதற்குள், சாக்கடைக்குள் சென்று கொண்டிருந்த மழை நீரில் அடித்து செல்லப்பட்டார். உடனடியாக அரவக்குறிச்சி போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் தேடியபோது, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை கார்னர் அருகில் உள்ள, நங்காஞ்சி ஆற்றில் இருந்து இறந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.