பசுமையாக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி
அரவக்குறிச்சி;பள்ளப்பட்டி நகராட்சியில், நகர்புற பசுமையாக்க திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும், பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் சாலை, சொக்கலாபுரம், மண்மாரி, நங்காஞ்சி ஆற்றங்கரை மற்றும் முக்கிய சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை முறையாக பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், களை அகற்றுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகளை பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் ஆனந்தகுமார் ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி பொறியாளர் கார்த்திக், சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நகராட்சி ஆணையர் ஆனந்தகுமார், ''நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளத்தை அதிகரிப்பதில், பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். மரக்கன்றுகளை அனைவரும் பாதுகாத்து வளர்க்க, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.