| ADDED : ஜூன் 08, 2024 02:36 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, 700 ரூபாய் கடன் தகராறில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மரிமானப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்தவர் முத்து, 28; கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 30. இவர்கள் 2 பேரும் உறவினர்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன், சக்திவேல், முத்துவிடம், 700 ரூபாய் கடன் வாங்கினார். இந்நிலையில் முத்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது தகராறு ஏற்பட்டு, கடந்த 3ல், முத்துவை, சக்திவேல் அடித்து கொன்றார். முத்துவின் தந்தை முருகன், 50, மற்றும் உறவினர் ராமு, 28, ஆகியோரும் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிந்து, தலைமறைவாக இருந்த சக்திவேலை தேடி வந்தனர். பர்கூர் அருகில் திருப்பத்தூர் சாலை, செந்தாரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நேற்று மதியம் சுற்றித்திரிந்த சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே, 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.