ஓசூர் - கிருஷ்ணகிரி பாதையில் 18 மணி நேரம் டிராபிக் ஜாம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர், பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.தற்போது போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லுாரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, சிப்காட் ஜங்ஷன் வரை, 13 கி.மீ., தொலைவில் ஆறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல், நேற்று காலை வரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. மேம்பால கட்டுமானப் பணி நடக்கும் பகுதிகளில் மண் சரிவால், சாலையில் மண்ணுடன் மழைநீர் சேர்ந்து சகதியானது.இதனால், சாலையில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றன. மேம்பாலப் பணி நடக்கும், 13 கி.மீ.,க்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கின. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரியை அடைய, 3 மணி நேரத்துக்கும் மேலானது. போக்குவரத்து நெரிசல் நேற்று மாலை, 5:00 மணி வரை நீடித்ததால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிக்கு ஆளாகினர்.