பாஸ்ட் புட் ஓட்டல் சூறை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
ஓசூர்:ஓசூர், சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 34. ஓசூர் தர்கா ஆன்நத் நகரில் தங்கி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். குமுதேப்பள்ளியில் உள்ள பாஸ்ட் புட் ஓட்டல் பங்குதாரர். கடந்த, 6 ஆண்டுக்கு முன், ஓசூர் சென்னத்துாரை சேர்ந்த ரெக்ஸ், 28, என்பவரது சகோதரியை காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த, 2 ஆண்டுகளாக தனித்தனியாக வசிக்கின்றனர். ஆனால், இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம். கடந்த, 5 நாட்களுக்கு முன், ஆனந்தகுமாரிடம் அவரது மனைவி, தன் ஸ்கூட்டரை பழுது பார்க்க கொடுத்தார்.இதையறிந்த ரெக்ஸ், ஆனந்தகுமாரிடம் சென்று, தன் சகோதரியின் ஸ்கூட்டரை கேட்டார். அதற்கு மெக்கானிக் கடையில் ஸ்கூட்டர் இருப்பதாக ஆனந்தகுமார் பதிலளித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டவே ஆத்திரமடைந்த ரெக்ஸ், தன் நண்பர்களான திப்பாளத்தை சேர்ந்த பழனி, 32, பிரகாஷ், 35, கார்த்திக், 26, ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் மதியம் குமுதேப்பள்ளியில் இருந்த பாஸ்ட் புட் ஓட்டலில் புகுந்து, ஆனந்தகுமாரை இரும்பு கம்பியால் தாக்கி, பிளாஸ்டிக் சேர், மேசையை சேதப்படுத்தினர்.இதில் காயமடைந்த ஆனந்தகுமார் புகார் படி, ரெக்ஸ், பழனி, பிரகாஷ் ஆகிய, 3 பேரை ஹட்கோ போலீசார் கைது செய்தனர். கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.