உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்விக்கு ஏற்ப மாணவர்களின் வாழ்க்கை உயர்கல்வி பயில கலெக்டர் வேண்டுகோள்

கல்விக்கு ஏற்ப மாணவர்களின் வாழ்க்கை உயர்கல்வி பயில கலெக்டர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி, ''மாணவர்களின் கல்விக்கு ஏற்பத்தான், அவர்களின் வாழ்க்கை அமையும். எனவே மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும்,'' என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 முடித்து உயர்கல்வி சேராத மாணவர்கள், உயர்கல்வி சேர, 'உயர்வுக்கு படி' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார்.கலெக்டர் தினேஷ்குமார் பேசுகையில்,'' மாவட்டத்தில், 15,000 மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்ததில், 1,098 மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில கல்லுாரியில் சேரவில்லை. இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் வகையில், தமிழக அரசு, 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடத்துகிறது. பிளஸ் 2 முடித்து உயர்கல்வி சேரும் மாணவ, மாணவியரின் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். இதை மேலும் அதிகரிக்க, பிளஸ் 2 பயின்ற அனைத்து மாணவ, மாணவியரும், ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் சேர வேண்டும். நீங்கள் கற்கும் கல்விக்கேற்பதான் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்,''என்றார்.விழாவில், 8 மாணவ, மாணவியருக்கு அரசு கலைக்கல்லுாரி, ஐ.டி.ஐ.,ல் சேர்ந்து கல்வி பயில்வதற்கான ஆணைகளை கலெக்டர், எம்.எல்.ஏ., ஆகியோர் வழங்கினர். சி.இ.ஓ., (பொ) முனிராஜ், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !