| ADDED : செப் 12, 2026 03:58 AM
ஓசூர்: அஞ்செட்டி அருகே, யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பா, 52. இவர் நேற்று காலை, 8:00 மணிக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக வனத்தை ஓட்டியுள்ள பகுதிக்கு ஓட்டிச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பிற்பகலில் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, யானை தாக்கியதில் படுகாயங்களுடன் மாதப்பா சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் அஞ்செட்டி போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.