மழையின்றி நெல் சாகுபடி பாதிப்பு அரூர் பகுதி விவசாயிகள் கவலை
அரூர்: அரூர் பகுதியில் மழையின்றி நெல் சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், தொடர்-மழை பெய்தது. இதையடுத்து, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, வாச்சாத்தி, தொட்டம்பட்டி, கீழானுார், மாம்பாடி, வேப்பம்பட்டி, பறையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்தனர். இந்நிலையில் மழையின்றி கடும் வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம், கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்யப்பட்டது. தற்போது பயிர் நன்கு வளர்ந்து நடவுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால், கடந்த, 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாததுடன் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், ஆழ்துளை மற்றும் கிணற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், நெல் நடவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.