கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு நேற்று அறிவித்த ஒரு குவிண்டால் கரும்புக்கு ஆதார விலையை, 25 ரூபாய் உயர்த்தியுள்ளது. முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பதவி ஏற்றபோது கரும்புக்கு, 8.0 சர்க்கரை சத்துக்கு விலை நிர்ணயித்தனர். ஆனால் தற்போது, 9.50 சர்க்கரை சத்துக்கு விலை நிர்ணயிக்கின்றனர். சர்க்கரை சத்தின் அளவை மட்டும் உயர்த்தியுள்ள நிலையில், கரும்புக்கான விலையை உயர்த்தவில்லை. 25 ரூபாய் விலை உயர்வால், ஒரு குவிண்டால் கரும்புக்கு தற்போது கிடைக்கும், 315 ரூபாயிலிருந்து, 340 ரூபாயாக மட்டுமே கிடைக்கும். கடந்தாண்டு, 315 ரூபாய் வழங்கியதை ஏற்காமல், கரும்பு நடவு நிறுத்த போராட்டம் நடத்தி வரும் கரும்பு விவசாயிகள், ஒரு குவிண்டால் கரும்புக்கு, 600 ரூபாய் கேட்டு, நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குஜராத்தில் ஒரு குவிண்டால் கரும்புக்கு, 440 ரூபாயும், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில், 400 ரூபாய் வரையும் கொடுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் ஒரு குவிண்டால் கரும்புக்கு, 315 ரூபாய் கொடுக்கின்றனர். இதனால், டில்லியில் விவசாயிகள் உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, மத்திய அரசு கரும்புக்கான விலையை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.