வரட்டாற்றில் வீணாக செல்லும் தண்ணீரால் விவசாயிகள் வேதனை
அரூர், நவ. 3-தடுப்பணையில் இருந்து, வரட்டாற்றில் தண்ணீர் வீணாக செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும்.இந்நிலையில், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கடந்த, 19ல் தடுப்பணை நிரம்பியது. தொடர்ந்து, தடுப்பணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வரட்டாற்றில் செல்கிறது. நிரம்பிய தடுப்பணைகடந்தாண்டு, போதிய மழை இல்லாததால் தடுப்பணை நிரம்பவில்லை. சமீபத்தில் பெய்த கனமழையால், 2 ஆண்டுகளுக்கு பின் தடுப்பணை நிரம்பியுள்ளது. தற்போது தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், வரட்டாற்றில் சென்று வாணியாற்றில் வீணாக கலப்பதால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.