அருங்காட்சியகத்தில் நடுகற்கள் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி : பராமரிப்பின்றி கிடந்த, ஐந்து நடுகற்களை, அரசு அருங்காட்சியகத்தில் தாசில்தார் ஒப்படைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், வராகசந்திரத்தில், முன்னாள் பஞ்., தலைவர் நாராயணப்பாவின் நிலத்தில், ஐந்து நடுகற்கள் கிடப்பதாக கிடைத்த தகவலின்படி, அந்த நடுகற்களை மீட்டு, மாவட்ட அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, சிவக்குமார் கூறியதாவது: இந்த நடுகற்கள், 350 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. போரில் இறந்த வீரர்கள், அவர்களுடன் உடன்கட்டை ஏறிய அவர்களது மனைவியருக்காக எடுக்கப்பட்டது. இந்த, 5 நடுகற்களும் ஒரே இடத்தில், ஒரே காலகட்டத்தை சேர்ந்த, ஒரே போரில் இறந்த வீரர்களுக்கானவை என தெரிகிறது. இது போன்ற பாதுகாப்பற்ற நிலையில் நடுகற்கள், தொல் பொருட்கள் இருந்தால், 86809 58340 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.