மனைவியால் எரிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம் அருகே, கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி, அவரை தீயிட்டு கொளுத்தியதில், சிகிச்சையில் இருந்த கணவர் நேற்று இறந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், நேரு புரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 47, கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா, 44. இவர்களுக்கு, இரு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர்.ரங்கசாமிக்கு, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், கடந்த, 9ல் வீட்டிற்கு வந்தார்.குடிபோதையில் இருந்த அவர், வீட்டின் மொட்டை மாடியில் துாங்கினார். கடுங்கோபத்தில் இருந்த அவரது மனைவி அன்றிரவு, 11:00 மணிக்கு, கணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டு கொளுத்தி தப்பினார்.தீக்காயங்களுடன் போராடிய ரங்கசாமியை, அவரது மகன் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, நேற்று காலை அவர் உயிரிழந்தார். தலைமறைவான அவரது மனைவி கவிதாவை, காவேரிப்பட்டணம் போலீசார் தேடி வருகின்றனர்.